முகாமிலிருந்து தப்பி ஓடிய கேரள ஐ.ஏ.எஸ்., அதிகாரி

கொல்லம்: கேரள மாநிலம், கொல்லம் மாவட்டத்தில், உதவி கலெக்டராக பணியாற்றி வருபவர், அனுபம் மிஷ்ரா. இவரது சொந்த மாநிலம் உத்தர பிரதேசம். சில மாதங்களுக்கு முன், இவருக்கு திருமணம் நடந்தது. இதற்காக விடுமுறையில் சென்ற அவர், பின், மலேஷியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு சென்று விட்டு, ஒரு வாரத்துக்கு முன், கேரளாவுக்கு வந்தார்.

மீண்டும் பணியில் சேர்ந்த அவரை, கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, வீட்டிலேயே, 14 நாட்களுக்கு தனிமையில் இருக்கும்படி அதிகாரிகள் அறிவுறுத்தினர். ஆனால் அவர், அதிகாரிகளிடம் கூறாமல், வீட்டிலிருந்து, கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள, தன் சகோதரர் வீட்டுக்குச் சென்றார்.


இது குறித்து தகவல் அறிந்த அதிகாரிகள், அனுபம் மிஷ்ரா இருக்கும் இடத்தை கண்டுபிடித்துள்ளனர். இது குறித்து விளக்கம் அளிக்கும்படி, கொல்லம் மாவட்ட கலெக்டருக்கு, கேரள மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.